அணு சக்தி மையங்களுக்கு தீவிரவாத மிரட்டல்- சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை
பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தாக்கித் தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை மாநில அரசுகளையும், மத்திய அரசையும் எச்சரித்துள்ளது.
இதையடுத்து அணு மின் நிலையங்கள், அணு உலைகள் உள்ள மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை அருகே கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் உள்ளது. இங்கு தீவிரவாதத் தாக்குதல் அபாயம் எதிரொலியாக எப்போதும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வந்துள்ள புதிய எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல கூடங்குளத்திலும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், கடற்படை அதிகாரிகள், டி.ஜி.பி. கே.பி.ஜெயின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.