வியாசர்பாடி 'சப்வே' மழை நீர் வெளியேற்றம்- போக்குவரத்து சீரடைந்தது
சென்னை: சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடந்த மழை நீர் வெள்ளம், 7 மோட்டார்களை வைத்து அகற்றப்பட்டது. இதையடுத்து அதன் வழியாக போக்குவரத்து தொடங்கியது.
சென்னை வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வ சுரங்கப் பாதையில் லேசான மழை வந்து விட்டால் கூட நிரம்பி வெள்ளம் தேங்கி விடும். இதனால், போக்குவரத்து கடும் பாதிப்பை சந்திப்பது வழக்கமாக உள்ளது.
இந்த நிலை வருடக் கணக்காக தொடர்ந்து கொண்டுள்ளது. ஆனாலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டுப் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் அங்கு தேங்கி விட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தண்ணீரை சுத்தமாக வழித்தெடுக்க மாநகர மேயர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 50 குதிரைத்திறன் கொண்ட 3 மோட்டார்கள், 35 குதிரை திறன் கொண்ட ஒரு மோட்டார், 13.5 குதிரைத் திறன் கொண்ட 4 மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ன.
இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரை, குழாய்கள் மூலமாக ஓட்டேரி நல்லா கால்வாய்க்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் இந்தப் பாதை வழியாக போக்குவரத்து சீரடைந்தது.
பெருமளவில் தேங்கிக் கிடந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டதையடுத்து மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.