நிலச்சரிவு-நீலகிரியில் பள்ளி நேரம் மாற்றம்
ஊட்டி: நிலச்சரிவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் பெரும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
நாளை முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளின் வேலை நேரம் காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு, தமிழக முதல்வர் அறிவித்தபடி, தற்காலிக வீடுகள் கட்டப்படவுள்ளது. முதல் கட்டமாக 100 வீடுகள் கட்டப்படும் என்றார்.
இதற்கிடையே, நீலகிரி பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் ஊட்டி அரசினர் விருந்தினர் மாளிகையில் நடந்தது.
அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.