சென்னை அருகே மாமனார் வீட்டில் மருமகன் தற்கொலை
சென்னை: காதல் திருமணம் செய்த இளைஞர் குடும்பத் தகராறில் தனது மாமனார் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் குமார் (30). தி.நகரில் உள்ள கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இவருடைய அக்கா தனலட்சுமி நர்ஸ்.
தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார் குமார். சில மாதங்களுக்கு முன்னர் கந்தன்சாவடி பகுதியில் உள்ள சோமராஜ் என்பவர் வீட்டிற்கு கம்ப்யூட்டர் பழுதுபார்க்க சென்றார். அப்போது சோமராஜ் மகள் ஸ்ரீஜாவுக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்தக் காதலை வெளியில் தெரிவிக்காமல் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிய வர முதலில் பிரச்சினை ஏற்பட்டது. பி்ன்னர் சமசரமாகி, கடந்த ஆகஸ்ட் மாதம் முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர்.
பின்னர் பெருங்குடியில் தனிக்குடித்தனம் சென்றார் குமார். வேலைக்கு செல்லும் முன் மனைவியை கந்தன்சாவடியில் உள்ள மாமனார் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீஜா கோபித்துக் கொண்டு தந்தை வீ்ட்டிலேயே இருந்து கொண்டார். குமார் கூப்பிட்டும் வரவில்லை.
இதனால் வேதனை அடைந்த குமார், தனது மாமனார் வீட்டு மாடியில் கயிற்றால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை, அந்த வீட்டு வளாகத்தில் உள்ள வங்கி வாட்ச்மேன் குமார் பிணமாக தொங்குவதைப் பார்த்து ஸ்ரீஜா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். அலறி அடித்து ஓடிய அவர்கள் குமாரின் பிணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
துரைப்பாக்கம் போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.