அமெரிக்காவில் 50 மில்லியன் குடும்பங்கள் பட்டினி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 6-ல் ஒரு பகுதி கடந்த 2008-ம் ஆண்டு பட்டினி கிடந்தனர் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தம் அமெரிக்கர்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. பல லட்சம் பேர் வேலையிழந்து, குடும்பமாக வீடுகளை விட்டு வெளியேறினர், பிழைப்பு தேடி.
இந்நிலையில், இந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 மில்லியன் குடும்பங்கள் பட்டினியால் தவித்தன என்று அமெரிக்க விவசாயத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை விரைவில் ரோமில் நடக்கும் உச்சி மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, "இந்த 50 மில்லியன் குடும்பங்களில் 5 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மிகக் கொடூரமான பட்டினியை அனுபவித்துள்ளனர். இந்த நிலைமையை அடியோடு மாற்ற வேண்டும். அரசு இதில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன" என்றார்.
அமெரிக்கா முழுவதிலும் உள்ள 44000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அமெரிக்கா.
1995க்குப் பிறகு இந்த அளவு அமெரிக்கர்கள் பட்டினியால் அவதிப்படுவது இப்போதுதானாம்.