For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே திட்டங்கள்-கூடுதல் நிதி கோரி மம்தா பானர்ஜிக்கு கருணாநிதி கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்குக் கூடுதலாக ரூ. 461 கோடி நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுவரும் முக்கிய பல ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் சுணக்கம் ஏற்பட்டுள்ளதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

குறிப்பாக, அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்களைப் பொறுத்தவரையில் 2009-2010ம் ஆண்டில் ரூ. 240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களைக் குறித்த காலத்தில் நிறைவேற்றுவதற்கு மேலும் ரூ. 280 கோடி தேவைப்படுகிறது.

மிக முக்கியமான மயிலாடுதுறை- திருவாரூர்- காரைக்குடி- திருத்துறைப்பூண்டி- திருக்குவளை வழியாக நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதைத் திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இன்மையால் முடிவடையாமல் நிலுவையில் உள்ளன.

அதே போல, இரட்டை ரயில் பாதைத் திட்டத்தைப் பொறுத்தவரையில் 2009-2010ம் ஆண்டில் ரூ. 112 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெறுகின்றன.

செங்கல்பட்டு- விழுப்புரம் மார்க்கத்தை இரட்டை ரயில் பாதையாக்கும் திட்டத்திற்கு மட்டும் இந்த ஆண்டில் ரூ. 77 கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

இதேபோன்ற நிலை, புதிய ரயில் பாதைகளை அமைப்பதிலும் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 85 கி.மீ. நீளமுள்ள கரூர்- சேலம் புதிய ரயில் பாதைத் திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகிறது.

நடப்பு 2009-2010ம் ஆண்டில் ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இத்திட்டத்திற்கு ரூ. 34 கோடி ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டதிற்கு இந்த ஆண்டில் ரூ. 140 கோடி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் உரிய முன்னேற்றம் ஏற்படவேண்டுமெனில் மேலும் ரூ. 104 கோடி தேவைப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.

இதேபோல, திண்டிவனம்-திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, மாம்மல்லபுரம் வழியாக சென்னை- கடலூர் ஆகிய 5 புதிய திட்டங்களும் நிதி இல்லாமல் சுணங்கியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து பணிகளை விரைந்து முடித்திட உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X