மதுரை கள்ளழகர் கோயில் நிலம்-முறைகேடாக விற்பனை?
ஆனால், அந்நிலத்துக்குரிய பட்டா தங்களது பெயருக்கு உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38,645 கோயில்கள், சமய நிறுவனங்கள் அறக்கட்டளைகள் உள்ளன.
இந்த அறக்கட்டளைகளில் தர்ம கட்டளை, குறிப்பிட்ட பணிக்கான கட்டளை என 2 வகை கட்டளைகளும் உள்ளன.
தர்ம கட்டளைகள் சார்பில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன. குறிப்பிட்ட கட்டளைகள் சார்பில் கோவில் பூஜை மற்றும் அன்னதானம் உள்ளிட்ட சேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த அறக்கட்டளைகளுக்கு சொம்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியைப் பெற்றே குத்தகைக்கு விட முடியும் அல்லது விற்க முடியும்.
மதுரை அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் செல்வார். அங்கிருந்து மீண்டும் மலைக்குப் புறப்படுவார். இச்சமயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அப்பகுதியைச் சேர்ந்த நாச்சாரம்மாள் பெயரில் 1923ம் ஆண்டில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.
இதை நாச்சாரம்மாள் மருமகன் உள்ளிட்ட உறவினர்கள் நடத்தி வந்தனர். அறக்கட்டளைக்கு மேலமடைப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய 12 ஏக்கர் நிலம் உள்ளது.
ஆனால், இந்த அறக்கட்டளையின் செயல்பாடு குறித்து புகார்கள் எழுந்ததால் பல ஆண்டுகளாகவே கள்ளழகர் திருக்கோயில் நிர்வாக அலுவலரே அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார்.
இதை எதிர்த்து ஆனந்தம்பிள்ளை என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், அறக்கட்டளை நிலத்தை விற்கமாட்டோம் என உறுதி அளித்ததன் பேரில், அறக்கட்டளை மற்றும் நிலத்தை ஆனந்தம்பிள்ளையின் வாரிசுகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி கள்ளழகர் கோயில் நிர்வாகம், அறக்கட்டளை மற்றும் நிலத்தை வாரிசுகளிடம் ஒப்படைத்தது.
ஆனால், கோயில் நிர்வாக அலுவலர் மேற்பார்வை செய்த காலத்தில், அறக்கட்டளைக்கு சேர்த்து வைத்த பணத்தை விதிகளை மீறி அறக்கட்டளை நிர்வாகிகள் செலவழித்து விட்டதாகப் புதிய புகார் எழுந்தது.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அறக்கட்டளை நிலத்தை விதிகளை மீறி விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், கருப்பாயூரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதி்ல் 8 பேர் மீது அவர் புகார் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தட்சிணாமூர்த்தி, சந்திரன், கதிரேசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
ஆனால், இந்தப் புகார்களை எல்லாம் நாச்சாரம்மன் டிரஸ்ட் மறுத்துள்ளது. அதன் நிர்வாகி தட்சிணாமூர்த்தி கூறுகையில்,
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அறக்கட்டளை கைங்கரியம் மற்றும் ஆவணத்தில் உள்ள சொத்துகள் சம்பந்தமாக தேவஸ்தானம் உள்ளிட்டவற்றை எதிர்த்து வழக்குகளை வாரிசுதாரர்களாகிய நாங்களே நடத்திக்கொள்ளலாம் என்றும், கைங்கரியங்கள் மற்றும் சொத்துகள் விஷயத்தில் அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு வாரிசுதாரர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆவணங்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த கோயில் நில விற்பனையில் ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகளும் உடந்தை என்று கூறப்பட்டுவதால் அரசு உடனே உரிய விசாரணைக்கு உத்தரவிடுவது நல்லது.