சென்னை மக்களின் அன்பு, வாழ்க்கை: நடால் பாராட்டு
ஸ்பெயின் நாட்டின் லா வாங்குவார்டியா இதழுக்கு உலகின் 2ம் நிலை வீரரான நடால் பேட்டி அளித்துள்ளார். அதில் இந்தியாவை குறிப்பாக, சென்னையை அவர் பாராட்டியுள்ளார்.
அதில்,
இந்தியாவில் வறுமை பெரிய அளவில் இருந்தாலும் கூட அதையும் தாண்டி இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் காண்கிறேன். இது எனக்கு வியப்பளிக்கிறது.
இந்திய மக்கள் மிகவும் தாராள மனம் படைத்தவர்கள், ஈர இதயம் கொண்டவர்கள், தவறுகளைச் செய்யாதவர்களாக உள்ளனர்.
நாம் அனைவருமே வறுமையைப் பற்றித்தான் பெரிதாக பேசுகிறோம். நான் சென்னைக்கு அதிக முறை போயுள்ளேன். அங்கு வறுமையைத் தாண்டி இந்தியர்களின் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதை பார்த்திருக்கிறேன். இதை உலக மக்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியை நம்முள் கொண்டு வருவது எப்படி என்பதை இந்தியர்களைப் பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். காரணம், சென்னை மற்றும் இந்திய மக்களின் வாழ்க்கை அனைவருக்கும் பொருந்தக் கூடியதே.
அங்கு (சென்னையில்) பெரும்பாலான மக்களிடம் எதுவுமே இல்லை. தெருக்களில் வாழும் மக்கள் நிறைய உள்ளனர். ஆனால் அவர்களின் முகங்களைப் பார்த்தால் நிச்சயம் அதில் மகிழ்ச்சியும், ஒரு வித திருப்தியும் தெரிவதை அறிய முடியும்.
இங்கு (ஸ்பெயின்) பெரும்பாலான மக்களிடம் எல்லாமே இருக்கிறது. ஆனால் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அவர்கள் மட்டுமல்லாமல், நான் உள்பட ஸ்பெயின் மக்கள் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கத் தவறி வருகிறோம்.
அதேபோல மனித குலத்திற்கு மிகப் பெரிய எதிரியாக இன்று இருப்பது மதம்தான். மதத்தின் பெயரால் நடைபெறும் அடக்குமுறைகள், தாக்குதல்கள் மிகவும் கொடுமையானவை. வரலாற்றைப் பார்த்தோமானால் உலகின் மிகப் பெரிய கொலைகாரனாக மதம்தான் இருப்பதை அறிய முடியும் என்றார் நடால்.
நடால் கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். சென்னையில் அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.