தொலைத் தொடர்புத்துறை-ராசாவை விலக்கி வைக்க ஜெ கோரிக்கை
சென்னை: தொலைத் தொடர்பு இலாகாவிலிருந்து அமைச்சர் ராசாவை பிரதமர் உடனடியாக விலக்கி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அ.ராசா சிக்கிக் கொண்டுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கடிதத் தொடர்பு ஆவணங்களிலிருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஓதுக்கீட்டில் முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற ராசாவின் யோசனைக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
முதலில் வருபவருக்கு முதலில் தருவது என்ற கொள்கை நீக்கப்பட வேண்டும் என்றும், மிக நேர்த்தியான ஏலமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய தொலைத் தொடர்பு முறைப்படுத்தும் ஆணைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இருப்பினும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான உரிமங்களை முதலில் வருபவருக்கு முதலில் தருவது என்ற அடிப்படையில் ராசா விற்பனை செய்து இருக்கிறார்.
லெட்டர் பேட் நிறுவனங்களான யுனிடெக் ஸ்வான் டெலிகாம் போன்ற நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியிருப்பதும், தங்கள் நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று தங்கள் நிறுவனங்களின் நிலைமையை உயர்த்திக் கொண்டிருப்பதும் தெளிவாகத் தெரிய வருகிறது. இதன் விளைவாக இந்திய அரசிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ராசா.
மத்திய கண்காணிப்பு ஆணையம் இதில் நடைபெற்று உள்ள ஊழலை உயர்ந்து மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய புலனாய்வுத் துறையும் தொலைத் தொடர்பு அமைச்சக அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டது.
இந்தத் தருணத்தில் தொலை தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் ராசா தொடர்ந்தால் நீதியை நிலைநாட்ட முடியாது. சாட்சிகளை கலைக்கும் இடத்தில் முறைகேடுகள் நடந்தது குறித்து தெரிவிக்கக் கூடிய அதிகாரிகளை ஆட்டிப் படைக்கும் இடத்தில் தற்போது ராசா இருந்து வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் தொலைத் தொடர்பு இலாகாவிலிருந்து ராசாவை இந்தியப் பிரதமர் உடனடியாக விலக்கி வைக்க வேண்டும். மேலும் விசாரணை நோக்கங்களை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான கொள்கை பின்பற்றப்பட்டதோடு மட்டும் விசாரணை நின்று விடாமல் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலின் பயனாளிகள் யார் என்பதையும் கண்டுபிடிக்க ஏதுவாக அமையும்.நியாயமான, நேர்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.