திருச்செந்தூர்-வந்தவாசிக்கு டிச.19ல் இடைத்தேர்தல்
சென்னை: திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதிக்கு அதிமுகசார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தார். வந்தவாசி சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெயராமன் சமீபத்தில் மரணமடைந்தார்.
இதனால், காலியாக உள்ள இவ்விரு தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று அறிவித்தார்.
வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 2 ஆகும். வேட்பு மனுக்கள் டிசம்பர் 3ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள் டிசம்பர் 5.
டிசம்பர் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு...
இதற்கிடையே, இன்று இரு தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பாக்கியம் தேவகிருபை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 150 ஆகும். இவர்களின் ஆண்கள் 66 ஆயிரத்து 960 ; பெண் வாக்காளர்கள் 73 ஆயிரத்து 190 ஆகும்.
இதே போல் வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வந்தவாசி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 210 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 80 ஆயிரத்து 561 , பெண் வாக்காளர்கள் 77 ஆயிரத்து 644 பேர் ஆவர்.