மின்னல் தாக்கி ஜெலட்டின் குச்சிகள் வெடித்துச் சிதறியதில் 5 பேர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்னல் தாக்கியதில் கல் குவாரியில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளில் மின்சாரம் பாய்ந்து, அது வைக்கப்பட்டிருந்த பாறை வெடித்துச் சிதறியது. இதில் 5 பேர் உடல் கருகி பலியானார்கள்.
காஞ்சிபுரத்தை அடுத்த தாளவாக்கம் அருகே உள்ள மதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு நேற்று மாலை 3.30 மணி அளவில் பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
பாறைக்கு அடியில் அவர்கள் ஜெலட்டின் குச்சிகளை வைத்து விட்டு மற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தொழிலாளர்கள் சற்று தள்ளிச் சென்று ஒதுங்கி நின்றார்கள்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் ஜெலட்டின் குச்சிகளில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவை வைக்கப்பட்டிருந்த பாறை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
வெடித்துச் சிதறிய பாறை துண்டுகள் நாலாபுறமும் சிதறின. பாறை துண்டுகள் தாக்கியதில், திருவண்ணாமலை மாவட்டம் நடுபாதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (28), ஊத்தங்கரை மண்ணடிப்பட்டைச் சேர்ந்த மனோகர் (50), சேலத்தைச் சேர்ந்த ஏழுமலை (45), மைசூரைச் சேர்ந்த செல்வராஜ் (40), செங்கல்பட்டு படூர் கிராமத்தைச் சேர்ந்த செவ்வந்தி (30) ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆறு பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் அமுல் என்ற பெண், பாபு, தாமோதரன் ஆகியோர் மட்டும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.