கடத்தல் நாடகம்-போலீஸை அலைய விட்ட சிறுவன்
சென்னை: டிவி ரிமோட்டை உடைத்து விட்டதால் தந்தை திட்டியதால் கோபமடைந்த மகன் வீட்டை விட்டு வெளியேறி, போலீஸாரை டென்ஷன்படுத்தி அவர்களை அலைக்கழித்துள்ளான்.
சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவன் சுரேஷ். 9ம் வகுப்பு படித்து வருகிறான். செவ்வாய்க்கிழமை காலை இவன் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலையில் திரும்பி வரவில்லை.
இதையடுத்து சுரேஷின் தந்தை ரங்கநாதன், பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது, வகுப்புகள் முடிந்ததும் சுரேஷ் கிளம்பிச் சென்றதாக தெரிய வந்தது.
இதையடுத்து மகாகவி பாரதி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் ரங்கநாதன். போலீஸார் சுரேஷைத் தேட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், இரவு 8.30 மணியளவில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய குரல், ரூ. 1 கோடி தந்தால் சுரேஷை விடுவிப்போம் என்று கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன், போலீஸாரிடம் இதைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுரேஷ் தேடுதல் வேட்டை முடுக்கி விட்பட்டது. இந்த நிலையில் ரங்கநாதன் செல்போனுக்கு வந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது திருத்தணியிலிருந்து அது வந்தது என்பதைக் கண்டுபிடித்து அங்கு ஒரு தனிப்படை அனுப்பப்பட்டது.
மீண்டும் போன் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் முன்னேற்பாடுகளுடன் ரங்கநாதன் காவல் நிலையத்தில் இருக்க வைக்கப்பட்டார். ஆனால் போன் எதுவும் வரவில்லை. இதையடுத்து ஏற்கனவே வந்த எண்ணுக்கு ரங்கநாதனை விட்டு போன் செய்ய வைத்தனர் போலீஸார்.
அப்போது மறு முனையில் ஒரு பெண் பேசினார். குழம்பிப் போன போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, மின்சார ரயிலில் தான் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தபோது பள்ளிச் சீருடையில் ஒரு சிறுவன் போனை இரவல் வாங்கி பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து சுரேஷ்தான் போனில் பேசியிருக்க வேண்டும் என போலீஸார் ஊகித்தனர்.
மேலும் அந்த சிறுவன் சென்டிரல் ரயில் நிலையம் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து சென்டிரல் ரயில் நிலையத்தில் போலீஸார் வலை விரித்தனர். நள்ளிரவு 1 மணியளவில் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான் சிறுவன் சுரேஷ். இதையடுத்து அவனைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, டிவி ரிமோட்டை தான் உடைத்து விட்டதாகவும், இதற்காக தந்தை திட்டியதாகவும், கோபமடைந்து வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திருத்தணிக்குச் சென்றதாகவும் தெரிவித்தான்.
இதையடுத்து போலீஸார் அவனை கடுமையாக எச்சரித்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.