'பெர்பார்மன்ஸ்' அறிக்கை: அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
இதுதொடர்பாக அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமரின் உத்தரவை கடிதமாக அனுப்பியுள்ளார். நவம்பர் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட என அமைச்சர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம்.
அனைத்து அமைச்சர்களும் தனித் தனியாக தவறாமல் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளையும் பிரதமர் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறுகையில், பிரதமரின் கடிதம் கிடைத்தவுடன் நான் பதில் அனுப்பி விடுவேன் என்றார்.
மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூறுகையில், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பிரதமர் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதும், அமைச்சர்களும் மீதும் நல்லெண் ஏற்பட இது வழி வகுக்கும். மேலும் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவும் ஊக்கமாக அமையும் என்றார்.
இருப்பினும் சில அமைச்சர்கள் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். பரூக் அப்துல்லா கூறுகையில், இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் யாரும் எந்த அறிக்கையும் கேட்கவில்லை. மக்கள்தான் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மார்க் போட வேண்டும். யார் நன்றாக வேலை செய்கிறார்கள், யார் வேலை செய்யவில்லை என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.
மன்மோகன்சிங் அமெரிக்கா பயணம்:
இந் நிலையில் ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறைப் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று அமெரிக்கா கிளம்பினார்.
அமெரிக்காவுக்குக் கிளம்பும் முன்பு அவர் ஒரு அறிக்கையை விடுத்தார். அதில்,
கடந்த பல ஆண்டுகளாக இந்திய-அமெரிக்க உறவில் பல்வேறு மாற்றங்களை நாம் பார்த்து வருகிறோம். இன்று, இந்த உறவில் மிகப் பெரிய முதிர்ச்சி, ஆழம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா நமது மிகப் பெரிய தொழில்முறை கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பொருளாதார உறவுகள் மேம்பட்டுள்ளன. இந்திய அமெரிக்க சமுதாயம் விரிவடைந்துள்ளது, வலுவடைந்துள்ளது.
அனைத்துக்கும் இரு நாடுகளும் மிகப் பெரிய ஜனநாயக கோட்பாடுகளை பகிர்ந்து கொண்டுள்ளன. மனித உரிமைகளுக்கு இரு நாடுகளும முக்கியத்துவம் தருகின்றன. பல்வேறு சமுதாய மக்கள் இணைந்து இணக்கமாக வாழும் நிலை இரு நாடுகளிலும் காணப்படுகிறது.
நீடித்த, நிலைத்த இந்திய - அமெரிக்க உறவு உலகளாவிய சவால்களை சந்திக்க தேவைப்படுகிறது.
அதிபர் ஒபாமாவை நான் சந்திக்கும்போது முக்கிய உலகளாவிய மிரட்டல்கள், தீவிரவாதம், தட்பவெப்ப மாற்றண், பொருளாதார சீர்குலைவு, தோஹா சுற்று வர்த்தகப் பேச்சு, அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசுவேன் என்றார்.
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதம், மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய நிலை, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் செல்கிறார் பிரதமர். அங்கு நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.