நெல்லையில் வக்பு வாரிய என்ஜீனியரிங் கல்லூரி!
நெல்லை: நெல்லையில் வக்பு வாரியம் மூலம் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
நெல்லை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே உலமாக்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இந்த உலமாக்கள் நல வாரியத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் பேர் வீதம் 30 ஆயிரம் பேரை சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இதுவரை 8 ஆயிரத்து 875 பேரிடம் இருந்து விண்ணப்ப் பெறப்பட்டு 4308 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.
நெல்லையில் உள்ள வக்பு வாரிய சொத்துகள் மூலம் வருமானம் எதுவும் இல்லை. எனவே அதில் வணிக வளாகங்கள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்து 500 பேர் ஹஜ் பயணம் சென்றுள்ளனர். சிறப்பு ஓதுக்கீடு மூலம் கூடுதலாக 500 பேர் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் சென்றுள்ளனர் என்றார் அவர்.
பேட்டியின் போது அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் உடனிருந்தார்.