அதிமுகவின் ராதாபுரம் பஸ் நிலையப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
நெல்லை: ராதாபுரத்தில் இன்று ஆர்பாட்டம் நடத்த அதி்முகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டக் கோரி அங்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு போலீசார் அனு்மதி மறுத்து விட்டனர். இதுகுறித்து வள்ளியூர் டிஎஸ்பியிடம் கொடுத்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன், மாநகர செயலாளர் பாப்புலர் முத்தையா, ஜெ பேரவை துணை செயலாளர் சின்னதுரை, முன்னாள் எம்எல்ஏ மாணிக்கராஜ், வக்கீல் இன்பதுரை, விபி மூர்த்தி, ஆர்எஸ் முருகன் ஆகியோர் நேற்று நெல்லையில் மாவட்ட எஸ்பியை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அதிமுக மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் கூறுகையில், ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் சூட்ட வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவப்படி இன்று ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் மறுத்துளளனர். ஜெயலலிதா அனுமதியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட எஸ்.பி ஆஸ்ரா கார்க் கூறுகையில், ராதாபுரம் பஸ் ஸ்டாண்ட் தொடர்பாக பிரச்சனை ஏற்படாமல் இருக்க அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாங்குநேரி, வள்ளியூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையே, நிலப் பிரச்சனை தொடர்பாக எஸ்.பி. கார்கை திமுக எம்.எல்.ஏ அப்பாவு சந்தித்து மனு கொடுத்தார். அவருடன் திமுகவினரும் வந்தனர்.
ஒரே சமயத்தில் திமுகவினரும், அதிமுகவினரும் எஸ்.பி. அலுவலகத்தில் கூடியிருந்ததால் பரபரப்பு நிலவியது.