பெரியாறு அணை வழக்கு - அரசியல் சாசன பெஞ்ச் அமைப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவசரம் அவசரமாக கேரள அரசு சட்டம் ஒன்றை இயற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி விட்டது.
இதை எதிர்த்தும், இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், திடீரென இதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கை அனுப்ப தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தது.
இந்த நிலையில் அரசியல் சாசன பெஞ்ச்சை தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். நீதிபதிகள் டி.கே.ஜெயின், சுதர்சன் ரெட்டி, முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பெற்றுள்ளனர். இந்த பெஞ்ச் தனது முதல் விசாரணையை நவம்பர் 23ம் தேதியன்று நடத்தவுள்ளது. அன்றைய தினம் விசாரணை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும்.