சட்டசபை இடைத் தேர்தல் - யார் யார் போட்டியிட வாய்ப்பு?
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் திமுக, அதிமுக போட்டியிடுவது மட்டுமே இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. தேமுதிக நிச்சயம் போட்டியிடும். அதேசமயம், இடதுசாரிகள், பாமகவின் நிலை பெரும் குழப்பமாக உள்ளது.
டிசம்பர் 19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட திமுகவும், அதிமுகவும் தயாராகி விட்டன. இந்த இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுவதால் தேர்தல் களம் இப்போதே தகிக்கத் தொடங்கி விட்டது.
இரு தொகுதிகளிலும் வருகிற புதன்கிழமை (25ம் தேதி) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என திமுக அறிவித்துள்ளது. அதிமுக தரப்பில் விரைவில் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, தேமுதிக சார்பிலும் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம். இதனால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
அதேசமயம், பாமகவின் நிலை தெளிவாகத் தெரியவில்லை. முறைகேடு நடக்காது என உறுதி அளிக்க வேண்டும், வாக்காளர்களுக்குக் காசு தர மாட்டோம் என எழுதித் தர வேண்டும். அப்படியானால்தான் போட்டியிடுவோம் என போகாத ஊருக்கு வழி கேட்டு வருகிறார் டாக்டர் ராமதாஸ். எனவே பாமக இந்தத் தேர்தலி்ல் போட்டியிடுமா, போட்டியிடாவிட்டால் யாரை ஆதரிக்கும் அல்லது நடுநிலை வகிக்குமா என்பது குறித்து இதுவரை தெளிவில்லை.
அதேபோல இடதுசாரிகளும் இதுவரை முடிவு எதையும் அறிவிக்கவில்லை. விரைவில் முடிவெடுத்து அறிவிப்போம் என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறியுள்ளன.
கடந்த ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலின்போது அதிமுகவின் புறக்கணிப்பு முடிவை நிராகரித்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டன. மகா மோசமான முறையில் வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தன என்பது நினைவிருக்கலாம்.
எனவே வருகிற இரு தொகுதி இடைத் தேர்தலி்ல் மும்முனைப் போட்டி நிலவுமா அல்லது நான்கு முனைப் போட்டியா என்பது குறித்து இன்னும் தெளிவான காட்சி ஏற்படவில்லை.
--