உத்தப்புரத்தில் கோஷ்டி மோதல்-வீடுகள் சேதம்
மதுரை: ஜாதிக் கலவரத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் மூண்டது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது உத்தப்புரம். இங்கு தலித் மக்களுக்கும், இன்னொரு ஜாதியினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஊருக்கு நடுவே சுவர் எழுப்பிய விவகாரம் நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில் அங்கு நேற்று திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தப்புரம் தெற்குத்தெருவைச் சேர்ந்த பொன்னையா அந்தப் பகுதி பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவரான புஷ்பம் என்பவரின் கோஷ்டியைச் சேர்ந்த பாண்டி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் பிரச்சினை வெடித்தது. இது நேற்று மோதலாக மாறியது. இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து பொன்னையா தரப்பு போலீஸில் புகார் கொடுத்தது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பம் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல புஷ்பம் தரப்பினர் அளித்த புகாரின்பேரில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.