இந்தியாவில் 24 சதவீத காடுகள் தான் உள்ளது - ஜெய்ராம் ரமேஷ்
கோவை: நாட்டின் மொத்த பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தியாவின் மொத்த பரப்பளவில் வெறும் 24 சதவீதம் மட்டுமே வனமாக உள்ளது.. இவற்றிலும் அடர்ந்த காடுகளின் பரப்பு வெறும் 2 சதவீதம் தான் உள்ளது என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை, ஆனைகட்டியில் சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவில் 60 ஆயிரம் நீர் நிலைகள் உள்ளன. இதில், கோவையில் மட்டும் 29 நீர்நிலைகள் உள்ளன.
நீர் நிலைகளில் நூற்றுக்கணக்கான அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு மாசு உண்டாக்கப்படுகிறது. இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போன்று, கடற்கரை ஓரமுள்ள சென்னை புலிபட், ஒரிசா சில்கா நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அழிந்து வரும் பறவைகளான சுவிப்ட், ஹார்ன்புல் போன்றவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை சலீம் அலி பறவைகள் சரணாலய வளர்ச்சிக்காக இதுவரை 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஐந்து கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள வன மரபியல், மரம் வளர்ப்பு நிறுவனத்தில், "குளோனிங்' முறையில் நான்கு வகை யூகலிப்டஸ் மரங்களும், நான்கு சவுக்கு மரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, உப்பு நீரை தாக்குப் பிடிக்கும் புதிய வகை யூகலிப்டஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் 4 ஆண்டு சோதனைக்கு பின் வெளியிடப்படும்.
கோவையில் வனத்துறை மாணவர்களுக்கான மத்திய அகடமியின் வளர்ச்சிக்காக 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்தும் 17 இயற்கை அமைப்புகள், உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில் மூன்று இந்தியாவில் உள்ளது.
அவை இமயமலைத் தொடர், மேற்கு மலைத் தொடர்ச்சி, வடகிழக்கு மலை தொடர்ச்சி. இதில், புதிய மின் திட்டங்கள், சுரங்கம் அமைக்கப்படுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 24 சதவீதம் மட்டுமே உள்ளது. இவற்றிலும் அடர்ந்த காடுகளின் பரப்பு வெறும் 2 சதவீதம் தான் உள்ளது.
நமது நாட்டில் மொத்தம் 37 புலிகள் சரணாலயங்கள் உள்ளது. அதில் ஒன்பது மட்டுமே நல்ல நிலையில் உள்ளன.
இந்தியாவில் இருந்து நேபாளம், மியான்மர் வழியாக சீனாவுக்கு கடத்தப்படும் புலிகளின் உடல் உறுப்புகள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் உள்ள வனவிலங்குகளைக் காப்பாற்ற, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மாநில அரசுகளின் உதவியோடு கடுமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வனவிலங்குகளைப் பாதுகாக்க, அந்தந்த பகுதி மக்களுடன் இணைந்து சமூக பாதுகாப்புக் குழு அமைக்கப்படும்.
வனப்பகுதியை அதிகரிக்க, வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சம் மக்களை ஜனநாயக முறையில் இடப்பெயர்ச்சி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக அளிக்கப்படுகிறது என்றார்.