இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்- திருச்செந்தூர்- நாராயணன், வந்தவாசி-முனுசாமி
திருச்செந்தூர் தொகுதிகியில் அம்மன் நாராயணனும், வந்தவாசி தொகுதியில் முனுசாமியும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் நேர்காணல் நடத்தினார்.
2 தொகுதிகளில் இருந்தும் வேட்பாளர்களாகத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளவர்களில் தலா 3 பேர் வரவழைக்கப்பட்டு இந்த நேர்காணல் நடந்தது.
திருச்செந்தூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் பள்ளத்தூர் முருகேசன், உடன்குடி ஒன்றிய செயலாளர் அம்மன் நாராயணன், தாமோதரன் ஆகியோரிடம் ஜெயலலிதா தனித்தனியாக நேர்காணல் நடத்தினார்.
இதில் தாமோதரன் 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் ஆவார்.
அதேபோல வந்தவாசி தொகுதிக்கு நகர எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் முனுசாமி, அனங்காவூர் ஒன்றிய செயலாளர் குணசீலன், சக்கரபாணி ஆகியோரிடம் தனித்தனியே நேர்காணல் நடத்தினார்.
இதில் சக்கரபாணி கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
வேட்பாளர்களின் கல்வித் தகுதி, கட்சிப் பணி, போராட்டங்களில் பங்கேற்ற விவரம், குடும்பப் பின்னணி போன்ற விவரங்களை ஜெயலலிதா கேட்டறிந்ததார்.
இந் நிலையில் முனுசாமியையும் அம்மன் நாராயணணையும் இன்று வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
அம்மன் நாராயணன்:
அம்மன் டி. நாராயணனின் சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம். வயது 57. ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். தொழில் விவசாயம்.
1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினர். 94ம் ஆண்டு முதல் உடன்குடி ஓன்றிய ஜெ. பேரவை இணை செயலாளராகவும், 99ம் ஆண்டு முதல் ஓன்றிய பேரவை செயலாளராகவும் பதவி வகித்தார். 2004ம் ஆண்டு மு்தல் உடன்குடி ஓன்றிய அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவரது மனைவி வசந்தா. இவர் 2001 முதல் 2006 வரை உடன்குடி யூனியன் சேர்மனாக பணியாற்றினார்.
திருச்செந்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து சொந்த ஊரி்ல் இருந்த அம்மன் நாராயணனிடம் கேட்டபோது,
கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்த எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும்.
அதிமுகவினர் அனைவரின் ஓத்துழைப்புடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். வேட்பு மனு தாக்கல் குறித்து தலைமையிடம் கேட்டு முடிவு செய்வேன் என்றார்.
இந்த இரு தொகுதிகளிலும் வரும் டிசம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
திமுகவுக்கு காங். ஆதரவு:
இந் நிலையில் இடைத் தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம் செய்ததால், 14 லட்சத்து 35 ஆயிரம் இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில், மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது.
திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில், திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக கேரளா முதல்வர் அச்சுதானந்தன், செயல்படுகிறார். எனவே, முல்லைப் பெரியாறு பிரச்னையில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.