ராஜ் தாக்கரே மீது ஆர்எஸ்எஸ்-விஎச்பி தாக்கு
பெங்களூர்: சுயநலத்துக்காக சில அரசியல்வாதிகள் மொழிப் பிரச்சனையை கிளப்பி வருகின்றன என்று சிவசேனா, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா ஆகியவை மீது ஆர்எஸ்எஸ தலைவர் மோகன் பகவத் தாக்குதல் தொடுத்தார்.
பெங்களூரில் நடந்த ஆர்எஸ்எஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
மகாரஷ்டிர சட்டசபையில் நடந்த கலாட்டா சரியல்ல.
ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தால் அதை கண்டிக்காதவர்கள் நமது தேசிய மொழியான இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்தால் மட்டும் கண்டிக்கின்றார்கள்.
என்ன வகையான அரசியல் இது?. மாநில மொழியும் மாநில நலனும் நாட்டின் நலனைவிட முக்கியமானவையா?. இந்திய மொழிகள் அனைத்தும் தேசத்தின் மொழிகள் தான்.
திருவள்ளுவர், சர்வஞ்னர் ஆகியோரின் சிலைகளை பெங்களூரிலும் சென்னையிலும் திறந்து வைத்து தமிழகமும் கர்நாடகமும் மாநில உறவுகள் விஷயத்தல் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளன. மொழிப் பிரச்சனையை உடைத்துள்ளன. ஆனால், சில கட்சிகள் மொழியால் மக்களைப் பிரித்து பிரிட்டிஷார் போல நடந்து கொள்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணிகளை வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது. உள்ளே வந்து பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும். இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் அமைப்பு ஆர்எஸ்எஸ்.
இந்தியாவின் மீது அமெரிக்கா அதிகாரத்தை செலுத்துகிறது. இது சரியல்ல. சீனாவில் இருந்து பொருட்கள் கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதைத் தடுக்க வேண்டும். சீனாவை எப்போதும் நாம் நம்பக் கூடாது.
இந்தியாவில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் போன்றோர்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு்ள்ளது.
மேலும் பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா ஆகிய நாடுகளால் இந்திய எல்லைகள் பாதுகாப்பாக இல்லை.
இந்தியா இந்துக்களின் நாடு. இங்கு வாழும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட இந்து கலாச்சாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்து பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் என்றார்.
கூட்டத்தில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், மின்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, தெற்கு பெங்களூர் தொகுதி எம்பி அனந்த்குமார் உள்ளிட்டோர் ஆஸ்எஸ்எஸ் சீருடையான காக்கி கால்சட்டை , வெள்ளை சட்டை அணிந்து கலந்து கொண்டார்.
அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது வழக்கமான பேண்ட்-சர்ட் உடையில் பங்கேற்றார்.
முன்னதாக அமைச்சர்களான ரெட்டிகளால் தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து மோகன் பகவத்துடன் 45 நிமிடங்கள் தனியே ஆலோசனை நடத்தினார் எதியூரப்பா.
ராஜ் மீது விஎச்பியும் பாய்ச்சல்:
இந் நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் அசோக் சிங்கால் நாக்பூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
மராட்டியர்களின் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு ராஜ் தாக்கரே அரசியல் நடத்தி வருகிறார். அவர் இந்தி மொழியை காரணமாக வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்.
மொழியை வைத்து பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
ராஜ் தாக்கரே இந்தியை மட்டும் அவமதிக்கவில்லை. தேசிய மொழியையே அவமதிக்கிறார். இதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அவருக்கு மக்களிடம் சிறிதளவே செல்வாக்கு இருக்கிறது. அதை வளர்க்கவே இப்படி மோசமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்றார்.