'அசிங்க' அர்ச்சகர்-பாமக பெண் எம்எல்ஏ ஆவேசம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுப்பட்ட அர்ச்சகர் தேவநாதன் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத் தொகுதியின் பா.ம.க. எம்எல்ஏ சக்தி கமலம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
"கோயில் என்பது புனிதமான இடம். இந்துக்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் பக்தர்கள் மிகவும் சுத்தமாக செல்வார்கள். அதுவும் கோவிலின் கருவறை என்றால் அர்ச்சகர்கள் தவிர யாரும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
அவ்வளவு புனிதத் தன்மை உள்ள கர்ப்பகிரகத்தில் இது போன்ற இழிவான செயல் செய்ய அந்த அர்ச்சகருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.
கோவிலின் புனிதத்தன்மையையே அவர் கெடுத்து விட்டார். அந்த அர்ச்சகர் கோவிலை மட்டும் அசிங்கபடுத்தவில்லை. பெண் இனத்தையும், இந்துக்களின் புனிதத் தன்மையையும் அசிங்கப்படுத்தியுள்ளார்.
அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டத்தில் உள்ள மிக பெரிய தண்டனையை அர்ச்சகருக்கு வழங்க வேண்டும்.
அர்ச்சகருக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனை எதிர்காலத்தில் தவறு செய்வோருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். எனவே கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.