முல்லைப் பெரியாறு வழக்கு-ஜன. 19க்கு ஒத்திவைத்து அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவசரம் அவசரமாக கேரள அரசு சட்டம் ஒன்றை இயற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி விட்டது.
இதை எதிர்த்தும், இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், திடீரென இதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அரசியல் சாசன பெஞ்ச்சை நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த பெஞ்ச்சில், நீதிபதிகள் டி.கே.ஜெயின், சுதர்சன் ரெட்டி, முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முல்லை பெரியாறு வழக்கு இன்று இந்த பெஞ்ச் முன்பாக வந்தது. ஆனால், வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்துவைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.
கேரள அரசுக்கு வாசன் கண்டனம்:
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பழநியில் நிருபர்களை சந்தித்த அவர், அணை விவகாரத்தில் கேரள அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவது வருத்தத்திற்குரியது என்றார்.