3 வயது சிறுமி பலாத்காரம்-கொலை: எய்ட்ஸ் நோயாளி வெறி
திண்டிவனம்: குடிபோதையில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொலை செய்த எய்ட்ஸ் நோயாளியை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைத் சேர்ந்த ராமச்சந்திரனின் 3 வயது மகள் பவானி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள்.
திண்டிவனம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த பகுதிக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் அருகில் இருந்த முருகன் என்பவரின் வீட்டுக்கருகே போய் நின்றது. இதேபோல் தொடர்ந்து இதே வீட்டை நோக்கி மோப்ப நாய் சென்றதால் முருகனை போலீசார் விசாரித்தனர்.
ஆனால் அவர் சந்தேகப்படும் படியான ஆதாரங்கள் இல்லாததால், வீட்டில் உள்ள மற்ற நபர்களை பற்றி விசாரித்தனர். அப்போது முருகனின் தம்பி துரைராஜ் திடீரென வெளியூருக்கு புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது.
அப்பகுதியை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார், இரு நாட்களுக்கு பிறகு துரைராஜ் அங்கு வந்ததும் பிடித்து விசாரித்தனர். முதலில் நடித்தவன், பின்னர் சிறுமி பவானியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான்.
துரைராஜை போலீசார் கைது செய்தனர். துரைராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: நான் சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தேன். எனக்கு உமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
கூலி வேலை செய்து வந்த எனக்கு, தகாத பெண்களுடன் ஏற்பட்ட சகவாசத்தால் எய்ட்ஸ் நோய் வந்தது. இதனால் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றாள்.
சம்பவத்தன்று நான் திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் உள்ள எனது தம்பி முருகன் வீட்டுக்கு வந்தேன். நாங்கள் 2 பேரும் கடையில் மது குடித்து விட்டு மாலை 6-30 மணி அளவில் வீடு நோக்கி திரும்பினோம்.
என்னுடைய தம்பி வீட்டுக்கு சென்று விட்டான். நான் மட்டும் தனியாக நின்ற போது திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது அந்த வழியாக சிறுமி பவானி வந்தாள்.
உடனே அவளுடைய வாயை பொத்தி அருகில் இருந்த பள்ளிக்கூட பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் பவானி மயங்கி விழுந்துவிட்டாள். நான் மட்டும் அங்கிருந்து வீடு திரும்பி விட்டேன்.
பிறகு சிறிது நேரம் கழித்து அங்கே நான் சென்று பார்த்த போது அவள் இறந்து கிடந்தாள். யாருக்கும் தெரியாமல் அவளுடைய உடலை முட்புதரில் வீசிவிட்டு வந்தேன்.
மறுநாள் பவானியின் கொலை விவகாரம் வெளியே தெரிந்தது. நானும் அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தேன். அப்போது மோப்ப நாய் வரப்போகிறது என்றார்கள்.
எனவே பயந்து திருச்சி வந்துவிட்டேன். மீண்டும் அதிகாலையில் நான் திண்டிவனம் திரும்பிய போது போலீசாரின் சந்தேகப் பார்வையில் விழுந்து சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு துரைராஜ் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.