தமிழர்கள் எப்படி வீடு திரும்புவார்கள்?-ஐ.நா கவலை
நியூயார்க்: முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எப்படி சொந்த ஊர்களுக்கு அனுப்ப்படுகிறார்கள் என்பது குறித்து ஐ.நா. சபை கவலையும், சந்தேகமும் வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதிக்குப் பின்னர் அனைத்து முகாம் தமிழர்களும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி இறுதிக்குள் அனைவரும் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இதை ஐ.நா. மனிதாபிமான பிரிவின் தலைவர் ஜான் ஹோம்ஸ் வரவேற்றுள்ளார். அதேசமயம், கவலையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. இருப்பினும் முகாம்களில் இருந்து வெளியேறும் தமிழர்களை பதிவு செய்யும் பணி எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பவதற்கு முன்பாக அவர்கள் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று பார்க்க அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக முகாம்களில் உள்ள தமிழர்களோடு இன்னும் விரிவான ஆலோசனைகளை நடத்த ஐ.நா. விரும்புகிறது.
ஊர் திரும்பும் தமிழர்களுக்கு உதவுவதற்கு வசதியாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவி அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தகவல் தெரிவிக்காதது கவலை அளிக்கிறது என்றார் ஹோம்ஸ்.