இடைத் தேர்தல்: கம்யூனிஸ்டுகள் நாளை முடிவு
சென்னை: இடைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து மதுரையில் 25ம் தேதி நடைபெறும் சிபிஎம் மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் சென்னையில் ஆலோசனை நடத்தின.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசியக்குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, செயற்குழு உறுப்பினர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராஜன், பி.சம்பத், செல்வசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து டிசம்பர் 7-ந் தேதி மறியல் போராட்டம் நடத்துகிறது. இதனை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
மதுரையில் நடைபெறும் சிபிஎம்மின் மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இடைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.
அதிமுகவுக்கு ஆதரவு கிடைக்குமா...?
இதற்கிடையே, அதிமுகவுக்கு இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த முறை நடந்த ஐந்து தொகுதி இடைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை புறக்கணித்தும், விமர்சித்தும் விட்டு தனியாக போட்டியிட்டன இரு இடதுசாரி கட்சிகளும். ஆனால் மகா மோசமான அளவில் வாக்குகளைப் பெற்று டெபாசிட்டைப் பறி கொடுத்தன.
யாருடனும் சேராமல் போட்டியிட்டால் சில ஆயிரம் ஓட்டு்க்கள்தான் கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும் என்பதை அந்தத் தேர்தல் நிரூபித்தது.
இந்த இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் அதே கதிதான் என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளனர். எனவே அதற்குப் பதில் அதிமுகவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்க முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த முடிவில்தான் அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு, தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு அதிமுக தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாக வேண்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.