ஹெட்லியுடன் தொடர்பு: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 5 பேர் கைது
இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் டென்மார்க்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பயங்கரவாதிகளான ஹெட்லி மற்றும் ராணாவுடன் தொடர்புடைய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹெட்லி, ராணா ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்துள்ளது. இவர்களுக்கு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஏ தொய்பாவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேர் ஹெட்லியுடன் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்து அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் ஹெட்லியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் அவர்களை காட்டிக்கொடுத்ததாகவும், அவர்களை மேலும் விசாரித்தால் பல தகவல்கள் வெளியாகும் என்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புலனாய்பு அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல், பணியில் உள்ள லெட்யூனென்ட் கர்னல்கள் இருவரும் அடக்கம்.
ஆனால், ஹெட்லி மற்றும் ராணாவுடன் தொடர்பு உள்ளதாக, சந்தேகத்தின் பேரில் ஒரேயொரு ஓய்வு பெற்ற மேஜர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார். பணியில் இருக்கும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும் அவர் கூறினார்.