சென்னை விமான நிலையம்-9 சுங்கத்துறை அதிகாரிகள் கைது
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்குப் பிரிவில் இருந்து பல நாடுகளுக்கும் பொருட்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களும் இங்கு சோதனையிடப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றன.
இந்த சரக்குப் பிரிவில் பெரும் முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஏராளமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையை குறைவாக நிர்ணயித்து குறைவான வரி விதிப்பது, வரியே விதிக்காமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது என இந்த சரக்குப் பிரிவை கண்காணிக்க வேண்டிய சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கடந்த இரு தினங்களாக சிபிஐ அதிகாரிகளின் 5 குழுக்கள் இரவு பகலாக இந்த சரக்கு மையத்தில் சோதனை நடத்தின.
சுங்க இலாகாவினரின் ஆவணங்களையும், சரக்கு ஏஜெண்டுகளின் ஆவணங்களையும் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்த சுங்கத்துறையினரிடம் இருந்து பல லட்சம் அளவுக்கு லஞ்சப் பணத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 2 பெண் அதிகாரிகள் உள்பட 9 சுங்க இலாகா அதிகாரிகளை மேல் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் இவர்களது வீடுகளிலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது. அதில் ஒரு அதிகாரியின் வீட்டியில் இருந்து 2 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் இரு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து ரூ. 16 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து 9 சுங்கத்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விவரம்:
பாஸ்கர்-கண்காணிப்பாளர்
அறிவுடை நம்பி-கண்காணிப்பாளர்
நாகேஸ்வரி-கண்காணிப்பாளர்
பழனியப்பன்-கண்காணிப்பாளர்
ஜக்மோகன் மீனா- முன்னெச்சரிக்கை அதிகாரி
ஆசைத்தம்பி-முன்னெச்சரிக்கை அதிகாரி
மஞ்சுளா- முன்னெச்சரிக்கை அதிகாரி
பெஞ்சமின்- முன்னெச்சரிக்கை அதிகாரி
கண்ணன்- வரி உதவியாளர்.
இவர்களோடு ஏஜெண்ட் குமார் என்பவரும் கைதாகியுள்ளார். குமாரின் உதவியாளர் ராஜ்குமார் என்பவர் தப்பியோடிவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பாஸ்கரன், கண்ணன், குமார் ஆகியோரிடம் மேல் விசாரமை நடத்த சிபிஐ அனுமதி கோரியதால் 3 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
ரெய்ட் குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில்,
சீனாவில் இருந்து குழந்தைகளின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மட்டமான பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பொம்மைகள் அடங்கிய பார்சல்களை சோதனை செய்யாமல் இறக்குமதி செய்ய இந்த அதிகாரிகள் உதவியுள்ளனர். இது கடத்தல் குற்றத்திற்கு சமமானது.
மேலும் சிங்கப்பூர், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களையும் மிக தாராளமாக அனுமதித்துள்ளனர்.
விட்டால் லஞ்சம் வாங்கிக் கொண்டு போதை பொருட்களைக் கூட அனுமதிப்பார்கள் போல.
அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வினி்யோகிக்க, பகிர்ந்து கொடுப்பதற்கென்றே ரகசிய ஏஜெண்டுகள் செயல்படுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களின் ரகசிய எண்ணை குறித்து சுங்க இலாகா அதிகாரிகளிடம் இந்தக் கும்பல் சொல்லிவிடும். அந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யாமலேயே ரிலீஸ் செய்வர். இப்படித்தான் முறைகேடு நடந்துள்ளது.
புகார் செய்யனுமா?:
சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் கேட்கும் சுங்க இலாகா அதிகாரிகள் பற்றி புகார் செய்ய விரும்புவோர் போலீஸ் சூப்பிரண்டு, சி.பி.ஐ., ஏ.சி.பி., மூன்றாவது தளம், சாஸ்திரி பவன், ஹாட்டவ்ஸ் சாலை, சென்னை-6 என்ற முகவரியிலும்,
splacchne.cbi.gov.in என்ற இணைய தள முகவரியிலும்,
044-28255899 என்ற தொலைபேசி எண்ணிலும், 044-28213828 என்ற பேக்ஸ் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.