தூதரக தாக்குதல்-கிருஷ்ணசாமிக்கு ஜாமீன்
டெல்லி: இலங்கை தூதரகத்தி்ல் அத்துமீறி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உட்பட 12 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்தாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து டெல்லி சாணக்யபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 12 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர்கள் 12 பேரும் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பின்பு, டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 12 பேரும் ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு ஒரு நபர் ஜாமீனிலும் விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டது.