டெல்லி பள்ளி பேருந்தில் தீ-சிறார்கள் தப்பினர்
டெல்லி: டெல்லியில் பள்ளிச் சிறார்களை ஏற்றிச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இருப்பினும் குழந்தைகள் பத்திரமாக தப்பினர்.
டெல்லி எவர் கிரீன் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியை அழைத்துச் செல்வதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்டது. இது எரிவாயுவால் இயங்கும் பேருந்தாகும்.
இந்தப் பேருந்து இன்று காலை கிழக்கு டெல்லியில் தர்மசில்லா மருத்துவமனை அருகே போய்க் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
திடீரென பஸ்சில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து பேருந்தில் இருந்த 50 சிறார்களும் வேகம் வேகமாக பஸ்சிலிருந்து இறக்கப்பட்டனர். திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததால் சிறார்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். விபத்தில் பஸ் டிரைவரும், கண்டக்டரும் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம், போக்குவரத்துக் கழகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.