இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும்- மன்மோகன் சிங்
வாஷிங்டன்: உலகம் முழுக்க பரவி வாழும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமா விருந்தளித்துக் கெளரவித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களையும், வெளிநாடு வாழ் இந்தியர்களையும் தாய்நாட்டிற்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நவீன தொழில்நுட்பங்களும், அரசாங்கத்தின் சாதகமான கொள்கைகளும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தாய்நாட்டில் பணிபுரிவதற்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்குவதற்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் செய்துள்ள பங்களிப்பு மிகப் பெரியது.
பொருளாதாரம், ஆற்றல், சூழல், கல்வி மற்றும் அதிகாரமயமாக்கல் ஆகிய 5 அம்சங்களும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் பிரதமர்.
லிபரான் அறிக்கை 'லீக்'-விசாரணைக்கு உத்தரவு:
முன்னதாக செய்தியாளர்களிடம் பிரதமர் பேசுகையில், லிபரான் கமிஷன் அறிக்கை லீக் ஆனது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரதமர்,
லிபரான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தகாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியானது வருந்தத்தக்கது. நான் டெல்லி திரும்பியதும், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி, தகுந்த விசாரணை நடத்தப்படும் என்றார்.
மும்பைத் தாக்குதல் நினைவு தினம் குறித்து கேட்டபோது, மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்றார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்து இருப்பதால், இந்த ஒப்பந்த விவகாரத்தில் உள்ள சிறு பிரச்சினைகளுக்கு இரண்டு வாரத்தில் தீர்வு காணப்பட்டுவிடும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் 3-வது நாட்டுக்கு பங்கு இல்லை என்பதை ஒபாமா தன்னிடம் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார் பிரதமர்.