திருப்பதியில் 4 பாக். உளவாளிகள் கைது-பெரும் சதிக்கு திட்டம்
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதால் கோவிலுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவில் மட்டுமல்லாமல் கோவிலைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் நாசவேலை செய்வதற்காக 4 உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதன் தொடர்ச்சியாக பெங்களூர் போலீசார் சில தகவல்களை ஆந்திரா போலீசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினார்கள்.
அதன் பேரில் ஆந்திராவை சேர்ந்த தீவிரவாதிகள் எதிர்ப்புப்படை போலீசார் நேற்றிரவு திருப்பதியில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். திருப்பதி மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜை முற்றுகையிட்டு சோதனை போட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி தங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த அறையில் தீவிர சோதனை போட்டு ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
பிடிபட்ட 4 பேரிடம் முதல் கட்ட விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
அவர்களில் 2 பேர் பெயர் ஜாகீர், இப்ராகிம். மற்ற 2 பேர் பெயரை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளான இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தேவையான தகவல்களை திரட்டி கொடுக்கும் உளவாளிகளாக செயல்பட்டு வந்தது தெரிந்தது.
திருப்பதி, திருமலை, காளஹஸ்தி நகர வரை படங்கள், முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பூஜை நடக்கும் நேரங்கள் ஆகிய குறிப்புகளை அவர்கள் மிக விரிவாக எழுதி வைத்திருந்தனர்.
திருப்பதியில் உள்ள லாட்ஜூகளில் இவர்கள் மாறி, மாறி தங்கி வந்துள்ளனர். சில மாதங்களாக இவர்கள் திருப்பதியில் தங்கி இருந்து தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் தகவல்களை திரட்டி உள்ளனர். திருப்பதி, திருமலை கோவில் பகுதிக்கு அடிக்கடி சென்று நோட்டமிட்டுள்ளனர்.
பாதுகாப்பு எந்த சமயத்தில் குறைவாக இருக்கும்? எந்தெந்த கட்டிடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தலாம்? போன்ற குறிப்புகளை அவர்கள் வரை படங்களில் எழுதி வைத்து இருப்பதன் மூலம் மிகப்பெரிய நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
தீவிர விசாரணையில் திருப்பதி கோவில், காளஹஸ்தி கோவில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கல்கி பகவான் ஆலயம் ஆகிய மூன்றும் தீவிரவாதிகள் சதி திட்டத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மும்பையைப் போல திருப்பதியில் பெரும் தாக்குதல் நடத்தி நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டியிருந்ததும் தெரிய வந்தது.
பிடிபட்ட 4 தீவிரவாதிகளும் திருப்பதியில் இருந்து ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ரகசிய இடத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து திருப்பதி கோவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.