பிரபல பெயர்களில் போலி 'பாடி ஸ்பிரே'
சென்னை: டெனிம் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'பாடி ஸ்பிரே' பாட்டில்களை சென்னைத் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
சீனாவில் இருந்து 2 கன்டெய்னர்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இவற்றின் விற்பனை மதிப்பு, ரூ.2 கோடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று கடந்த வாரத்திற்கு முன்பு வந்தது. அந்த கப்பலை சுங்கத்துறை ஆணையர் ராஜன் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கப்பலில் இருந்த 2 கன்டெய்னர்களில் டெனிம், ரெவிலான், மேக்ஸி, மூன் டிராப்ஸ், டாமிகேர்ஸ் உட்பட பல வகையான வாசனை திரவிய பாட்டில்கள் இருந்தன.
இவை அனைத்தும் லிம்ரா என்ற நிறுவனத்தின் பெயரில் அலிகான் என்பவருக்கு வந்திருந்தது. ஆவணங்களில் இருந்த தகவல்களால் சந்தேகமடைந்த அதிகாரிகள், பொருட்களை ஆய்வுக்கு அனுப்பினர்.
இதில் இருந்த டெனிம் பாட்டில்கள் தங்களின் தயாரிப்பு இல்லை என்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துவிட்டது. மேலும் அதில் இருந்த அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இறக்குமதி செய்த அலிகானிடம் போலீசார் விசாரித்தபோது, 'ஒரிஜினல் தான் கேட்டேன். போலி சரக்குகளை அனுப்பிவிட்டார்கள்' என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து சுங்கத்துறை ஆணையர் ராஜன் கூறுகையில், 'கைப்பற்றப்பட்ட பொருட்களின் விற்பனை மதிப்பு, ரூ.2 கோடியை தாண்டும். இந்த வாசனை திரவியங்கள் அனைத்தும் காலாவதியானவை மற்றும் போலியாக தயாரிக்கப்பட்டவை.
பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். ஆனால், உள்ளேயிருப்பது அபாயகரமானது. இவற்றை பயன்படுத்தினால் தோல் நோய் ஏற்படும்' என்றார்.
விமான நிலையத்தில்...:
விமான நிலைய சரக்குப் பிரிவில், லஞ்சம் வாங்கிக்கொண்டு பொருட்களை சோதனையிடாமலும், வரியினங்களை குறைத்தும் அதிகாரிகள் முறைகேடு செய்வது குறித்து பரவலாக புகார்கள் இருந்து வந்தன.
இதுதொடர்பாக இருதினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, அதிகாரிகள் மற்றும ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டனர்.
இதன் எதிரொலியாகவே துறைமுகங்களிலும் சுங்க அதிகாரிகள் மிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.
சென்னை விமான நிலைய அதிரடி சோதனையின் போது சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 800 பார்சல்களை பட்டுவாடா செய்ய தடை விதித்திருந்தனர்.
தற்போது, 5 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் குழு இப்பார்சல்களை பிரித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றை ஆய்வு செய்து முடிக்க ஒரு வாரமாவது ஆகும். அப்போது மேலும் அதிரடி கைது நடவடிக்கைகள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.