அலட்சிய பேச்சு- கசாப் வக்கீலுக்கு சிக்கல்
உங்களது இந்த நடத்தைக்காக ஏன் வழக்கறிஞர் பணியை தடை செய்யக் கூடாது என்றும் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
மும்பை தாக்குதல் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், அரசுத் தரப்பு சாட்சிகளின் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.
அப்போது, நீதிபதி தஹிலியானி, அப்பாஸ் கஸ்மியிடம், அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறீர்களா?' என்று கேட்டார்.
அதற்கு அப்பாஸ் கஸ்மி, சாட்சிகளின் பிரமாண பத்திரங்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை. பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த பிறகு எனது வியூகத்தை கூறுகிறேன்' என்றார். மேலும், பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதாக, விசாரணையின் ஆரம்பத்தில் அரசு வக்கீல் கூறவில்லை என்றும் கூறினார்.
இதைக் கேட்டதும் அவரது பேச்சுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இது பொறுப்பற்ற பேச்சு. இப்படிப் பொறுப்பில்லாமல் பேசிய, தவறான நடத்தைக்காக ஏன் உங்களுக்கு வக்கீலாக பணியாற்ற தடை செய்யக் கூடாது என்று கூறினார். பின்னர் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.