ஸ்வைன் ப்ளூ-அமைச்சர் கோ.சி. மணி மகன் மரணம்
சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மதியழகன் (51) பன்றிக் காய்ச்சல் நோயால் பலியானார்.
நாகை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்து வந்த அவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.
அவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மறைந்த மதியழகனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
மதியழகனின் உடல் அவரின் சொந்த ஊரான மேக்கிரி மங்களத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
மதியழகன் உடலுக்கு மத்திய அமைச்சர், மு.க.அழகிரி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மதியழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு உதவியாக இருந்த டிரைவர் மற்றும் மகன்கள் திருமாவளவன், பொன்னிவளவன் ஆகியோருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.