இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு.. ஆனால்,
அதே நேரத்தில் ஜெயலலிதாவுடன் மேடையில் ஏற மாட்டோம் என்றும் அக் கட்சி திட்டவட்டமாக கூறியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறுகையில்,
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் நாங்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம். அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச் செயலார் ஜெயலலிதாவுடன் மேடை ஏறி பேச மாட்டோம். தனியாகவே பிரசாரம் செய்வோம் என்றார்.
திருச்செந்தூர், வந்தவாசி (தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த நிலையை முடிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று சென்னையில் சந்தித்துப் பேசி, இறுதி முடிவை அறிவிப்பது என தீர்மானித்திருந்தன.
ஆனால், இந்நிலையில் திடீரென நேற்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவை தெரிவித்தனர்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜனும் நாளை (இன்று) ஜெயலலிதாவைச் சந்திப்பார், ஆதரவைத் தருவார் என்றார்.
ஜெவை சந்திக்கவும் மாட்டோம்:
முன்னதாக நேற்று நிருபர்களிடம் பேசிய வரதராஜன், ஆனால், தா. பாண்டியனின் இந்த அறிவிப்பு குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜனிடம் கேட்டபோது,
இடைத்தேர்தல் தொடர்பாக ஜெயலலிதாவை சந்திக்கும் திட்டம் எதுவும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இல்லை. நிச்சயமாக அவரை சந்திக்க மாட்டோம் என்றார்.
ஆனாலும் முன்பே திட்டமிட்டபடி சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவோம். அவர்களின் நிலைப்பாட்டை அறிந்த பின்னர், (அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு என்று கூறிவிட்ட பிறகு இவர் இன்னும் என்ன நிலைப்பாட்டை அறிய இருந்தார் என்று தெரியவில்லை). எங்கள் கட்சியின் முடிவை அறிவிப்போம் என்றார் வரதராஜன்.
இந் நிலையில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக வரதராஜன் அறிவித்துள்ளார்.
அதிமுகவை ஆதரிக்கும் விஷயத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்தே இரு கட்சிகளின் ஒற்றுமையைக் காக்க ஜெயலலிதாவை சந்திக்காமலேயே அதிமுகவுக்கு ஆதரவு தருவோம் என்று வரதராஜன் அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பல கட்சிகளும் ஆதரவு..:
இந் நிலையில் ஜெயலலிதாவை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், இந்திய குடியரசு மாநில கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத் ஆகியோரும் நேரில் சந்தித்து இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புறக்கணிக்கிறது பாஜக:
இந் நிலையில் திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பாஜக தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேர்தலில் திமுக, கூட்டணிக்கு எதிராக வாக்குகள் சிதறினால் அது அவர்கள் செய்யும் தவறுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது போல் ஆகிவிடும்.
எனவே தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கிறோம்.
கடந்த ஐந்து சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் சரத்குமார் உள்ளிட்ட குட்டிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலைச் சந்தித்து டன கணக்கில் மண்ணைக் கவ்வியது நினைவிருக்கலாம்.