செங்கோட்டையில் சாமி சிலை உடைப்பு - போலீஸ் குவிப்பு
செங்கோட்டை: செங்கோட்டையில் சாமி சிலை அவமதிக்கப்பட்டு, உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.செங்கோட்டை மேலூர் பெரியசாமி தெருவில் பாலசக்தி வினாயகர் கோவில் மற்றும் அதன் அருகேயுள்ள வடக்குத்தி அம்மன் கோவில் தெருவில் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த இரு கோவில்களையும் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் நேற்று நள்ளிரவு யாரோ சில மர்ம ஆசாமிகள் வினாயகர் கோவிலில் செருப்பு, வாரியல், மற்றும் இதர மாட்டு கழிவு பொருட்களை அள்ளி உள்ளே வைத்தும், அதற்கு வடபுறம் உள்ள கருப்பசாமி கோவில் சிலையை நகராட்சி கழிவு நீர் ஓடையில் உடைத்து போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை அப்பகுதி மக்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இக்காட்சியை கண்டு அதிர்ந்து அப்பகுதி மக்களிடம் கூறவே ஆண்களும், பெண்களும் திரண்டு வந்தனர். செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், தாசில்தார் ராஜையா, பாஜக, இந்து முண்ணனி பிரமுகர்களும் அங்கு திரண்டு வந்தனர். கூடியிருந்த பொது மக்களிடம் போலீசார் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் ஆண்களும், பெண்களும் அஙகு திரண்டு வந்து கொண்டே இருந்தால் பதட்டம் உருவானது. போலீசார் சாமதானத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள் ஊர்வலமாக செங்கோட்டை காவல் நிலையம் முன்பு திரண்டதால் மேலும் பரபரப்பு உருவானது. இதனை தொடர்ந்து குற்றாலம், கடையம், தென்காசி, உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.
திடீரென திரண்டு நின்ற பொதுமக்கள் ஒரு அரசு பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். ஓடிவந்த போலீசார் சமாதானம் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
தென்காசி கோட்டாச்சி தலைவர் மூர்த்தி, அம்பை டிஎஸ்பி கோபாலன், மற்றும் மேலூர் பகுதி சமுதாய தலைவர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் இன்று இரவுக்குள் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், தனிபிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். செங்கோட்டை நகர் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் முன்பும், சம்பந்தபட்ட வினாயகர் கோவில் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.