For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைகை பாஷை கற்கும் தமிழக கமாண்டோக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அதிரடிப்படை கமாண்டோப் படை வீரர்கள், வாய் பேசாதோர், காது கேளாதோர் பயன்படுத்தும் சைகை பாஷையை கற்கவுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இந்த சைகை பாஷை உதவும் என்பதால் இந்த திட்டம்.

சென்னையைச் சேர்ந்த சிஎஸ்ஐ காதுகேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் இந்த போதனை நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 18ம் தேதி தொடங்கும் இந்த பயிற்சி வகுப்பு 40 நாட்கள் நடைபெறவுள்ளன.

அமெரிக்க மெரைன் மற்றும் கடற்படையினர் சைகை பாஷையில் கை தேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளை சைகை பாஷையத்தான் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு கமாண்டோப் படையினர் அமெரிக்க மெரைன் படையினரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது என்எஸ்ஜி படையினர் சைகை பாஷையப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது வழக்கமாக காது கேளாதோர், வாய் பேசாதோர் பயன்படுத்தும் சைகை பாஷைய விட மிகவும் சுருக்கமானது. காது கேளாதோர், வாய் பேசாதோர் பயன்படுத்தும் சைகை பாஷையில் நீண்ட வாக்கியத்தைக் கூட சாதாரணமாக வெளிப்படுத்த முடியும்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் கமாண்டோக்களுக்கு இந்தப் பாஷை மிகவும் உறுதுணையாக இருக்கும். உத்தரவுகளையும், தாக்குதல் நடவடிக்கைகளையும் அவர்கள் ஒரு சைகை மூலம் அடுத்த வீரருக்கு வெளிப்படுத்த முடியும், விரைவான நடவடிக்கைக்கும் இது உதவும்.

உதாரணத்திற்கு, மாடிக்குப் போ, மேலும் ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வருகிறேன் என்று சொல்வதற்குப் பதில் ஒரு சைகையில் அதை தெரிவித்து விட்டு மின்னலென அடுத்த நடவடிக்கைக்குப் போக முடியும். இந்த நீளமான வாக்கியத்தை சைகை மூலம் சொல்ல 5 விநாடிகள்தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தீவிரவாதிகளுக்கு நாம் வருவதை அறியாத வண்ணம் அமைதியாகவும் இதை செய்ய முடியும்.

இதுகுறித்து கமாண்டோப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிட்டத்தட்ட 1000 வார்த்தைகளை நாங்கள் தொகுத்து வைத்துள்ளோம். இந்த வார்த்தைகளை சைகை மொழியில் பரிமாறிக் கொள்வது குறித்து வீரர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.

தீவரவாத நிலை ஒன்றைத் தாக்கச் செல்லும்போது அங்கு தகவல் சாதனத்தைப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கும். மேலும் சத்தம் போட்டு பேசும்போது அதைக் கேட்டு தீவிரவாதிகள் உஷாரடைய நேரிடும். எனவே சைகை பாஷை இந்த மாதிரி சமயங்களில் வெகுவாக கை கொடுக்கம்.

தீவிரவாதிகளின் நிலை, எத்தனை பேர் உள்ளனர், என்ன மாதிரியான ஆயுதங்களை வைத்துள்ளனர் என்பதை சைகை மூலம் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ள சைகை பாஷை உதவும் என்றார்.

இந்த திட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் கூறுகையில், இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானது. கமாண்டோ வீரர்கள் எங்களைத் தேடி வருவதை பெருமையாக கருதுகிறோம். மேலும், அவர்களுடன் எங்களது மாணவர்கள் கலந்து பழக நல்ல வாய்ப்பும் கிடைத்துள்ளது.

கமாண்டோப் படையினருடன் கலந்து உரையாடவிருப்பது அவர்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும்.

45 நாட்களுக்கு முன்பு கமாண்டோ வீரர்களுக்கு நான் ஒரு நாள் பயிற்சி வகுப்பை நடத்தினேன். அவர்கள் விரைவாக நான் சொன்னதை கிரகித்துக் கொண்டனர். சைகை பாஷையைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X