பாபர் மசூதி இடிப்பு இயக்கத்தில் வாஜ்பாய்க்கும் தொடர்பு இருந்தது- சிங்கால்
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட ராமர்ஜென்ம பூமி இயக்கத்தில் அடல் பிகாரி வாஜ்பாயும் ஈடுபட்டிருந்தார் என்று கூறியுள்ளார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமர் ஜென்ம பூமி இயக்கத்தில் வாஜ்பாயும் ஒரு அங்கமாக இருந்தார். அதற்காக கைதும் செய்யப்பட்டார். அவர் இந்த இயக்கத்தில் ஈடுபடவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். லக்னோவில் அவர் கைது செய்யப்பட்டார். அதை யாறும் மறுக்க முடியாது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தனது வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சோக நாள் என்று கூறியுள்ளார் அத்வானி. இன்னொரு முறை அப்படிக் கூறாதீர்கள் என்று அவரிடம் நான் கூறியுள்ளேன்.
ராமர் ஜென்ம பூமி இயக்கம் துறவிகளின் இயக்கம். ஆனால் அதற்கு அரசியல் வடிவம் கொடுக்கப்பட்டு விட்டது. இது முற்றிலும் தவறானதாகும் என்றார் சிங்கால்.