அணு ஆயுத கட்டுப்பாட்டு அதிகாரம் - கிலானியிடம் கொடுத்தார் சர்தாரி
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்துக் கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. தினசரி நடந்து வரும் குண்டுவெடிப்புகள், சர்தாரிக்கும், கிலானிக்கும் இடையிலான அதிகாரப் போர் ஆகியவற்றால் பாகிஸ்தான் அலங்கோலமாகிக் காணப்படுகிறது.
இதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் யாருடன் நடத்துவது என்றே தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தன்னிடம் இதுவரை இருந்து வந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டை, பிரதமருக்கு மாற்றியுள்ளார் சர்தாரி.
பாகிஸ்தானின் தேசிய கமாண்ட் ஆணையம்தான் அணு ஆயுதக் கட்டுப்பாட்டை வைத்திருந்தது. அதன் தலைவராக இருப்பவர் சர்தாரி. தற்போது இந்த கட்டுப்பாட்டை பிரதமருக்கு மாற்றியுள்ளார். இதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் அவர் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் பரக்கத்துல்லா பாபர் கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கும், பிரதமருக்கும் கூடுதல் அதிகாரம் கிடைக்க வகை செய்யும் விதத்தில் இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, டிவி ஒன்றுக்கு சர்தாரி அளித்த பேட்டியில், பிரதமரை நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அதிபர் வசம் உள்ள முக்கிய அதிகாரங்களை டிசம்பர் மாதத்திற்குள் நீக்கப் போவதாகவும் சர்தாரி கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கிலானி - சர்தாரி இடையிலான உள்நாட்டுப் போரில் கிலானியின் கை ஓங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.