ஜெ வீடு முன் தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டரால் பரபரப்பு
சென்னை: உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாகக் கூறி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா வீ்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வட்டச் செயலாளர் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் கடந்த 23ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தென்சென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது மேற்பார்வையில் கட்சியின் வார்டு, பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமின் ஆதரவாளர்கள் பெருமளவில் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போதைய மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜனின் ஆதரவாளர்கள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த புகார்கள் குறித்து பொறுப்பாளர்கள் சரியான பதில் தரராததால் வி.பி.கலைராஜன் சுமார் 200 பேருடன் இன்று காலை போயஸ் கார்டன் பகுதியில் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டனர்.
அங்கு அவர்கள், 'கட்சித்தேர்தலில் முறைகேடு நடக்கிறது, பொதுச்செயலாளர் தீர்வு காண வேண்டும்' என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே, தென் சென்னை 91வது வட்ட செயலாளரான குமரவேல் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது அங்கிருந்த போலீசார் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர். உட்கட்சி தேர்தலில் ஒரு தரப்புக்கு ஆதரவாக பொறுப்பாளர்கள் நடந்து கொள்கிறார்கள். இதை கட்சியின் பொதுச்செயலாளர் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் குமரவேல் கூறினார்.
அதிமுக உட்கட்சித் தேர்தல் படு சூடாக காணப்படுகிறது.
கடந்த வாரம் தர்மபுரியில் உட்கட்சி தேர்தல் பிரச்னை தொடர்பாக வீரமணி என்பவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.