துபாய் நிதி நெருக்கடி - இந்தியர்கள் தாயகம் திரும்ப வாய்ப்பில்லை - வயலார் ரவி
சென்னை: துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கருத முடியாது என்று வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
சென்னையில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'துபாயில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள். தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் இந்தியா கவலைப்பட ஒன்றுமில்லை.
தற்போதுள்ள வெடித்துள்ள பொருளாதாரப் பிரச்னையின் ஆரம்ப நிலையிலேயே நான் இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பேசினேன். அந்த சமயத்தில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால், இப்போது அவர்களில் பெரும்பாலானோர் திரும்பிச் சென்று விட்டனர்.
துபாய் தூதரக அலுவலகத்தில் இது சம்பந்தமாக தொடர்பு கொண்ட நிலையில் தான் உள்ளேன். கவலைப்பட ஒன்றுமில்லை. அங்கு பணிபுரியும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நிலை நாங்கள் கருதவில்லை' என்றார்.