இளங்கோவன் வீடு மீது தாக்குதல் - மதுரை என்ஜீனியருக்கு வலை வீச்சு
சென்னை: சென்னையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு தாக்கப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த என்ஜீனியரைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
சென்னை சாஸ்திரி நகரில் உள்ள இளங்கோவனின் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த என்ஜீனியர் விஜயக்குமார் என்பவரை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்தான் பெட்ரோல் குண்டுகளைச் செய்ய தங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததாக கைதான உதவி இயக்குநர் மித்ரன், அருள்,மணி ஆகியோர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து விஜயக்குமாரை தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். இவர் நாம் தமிழர் அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
இவரைப் பிடிக்க தனிப்படை ஒன்று மதுரைக்கு அனுப்பபப்படடுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.