For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக-அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

Amman Narayanan
திருச்செந்தூர் & வந்தவாசி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. கடந்த 25ம் தேதி துவங்கிய மனு தாக்கல், நாளை மறுதினம் முடிவடைகிறது.

இந் நிலையில் திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தேரடித் திடலில் இருந்து, மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், ஊர்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தார்.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கூடுதல் ‌தேர்தல் அதிகாரி பாக்கியம் தேவகிருபையிடம் அவர் மனு தாக்கல் செய்தார்.

40,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம்-அழகிரி:

பின்னர் நிருபர்களிடம் பேசிய அழகிரி, சென்ற இடைத் தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா தற்போது போட்டியிடுகிறார். சில அதிமுகவினர் கூறியதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

ஆனாலும் கடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றது போலவே இப்போதும் திமுக அ‌மோக வெற்றி பெறும். 40,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றார்.

அதிமுக வேட்பாளர்..

அதே போல அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணணும் வ.உ.சி. திடலில் இருந்து அதிமுகவினருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஊர்வலத்துக்கு திருச்செந்தூர் அதிமுக, தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் , டி.ஜெயக்குமார், அன்வர்ராஜா, ராஜகண்ணப்பன், ஜெனீபர் சந்திரன், பொள்ளாச்சி ஜெயராமன், தவளவாய் சுந்தரம், நத்தம் விஸ்வநாதன் உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூரில் தேமுதிக வேட்பாளர் கோமதி கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார்.

வந்தவாசியி்ல்...

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் கமலக்கண்ணனும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

அண்ணாசிலை, காந்தி சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கார் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்த அவர் உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில், வேணுகோபால் எம்பி, முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் புடைசூழ சிப்காட் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எஸ்.நாகராஜனிடம் வேட்புமனு மனு தாக்கல் செய்தனர்.

அதே போல அதிமுக வேட்பாளர் முனுசாமியும் வந்தவாசி தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக நிர்வாகிகள் மதுசூதனன், தம்பிதுரை, பொன்னையன், வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக ஜனார்த்தனனும் போட்டியிடுகிறார்.

திருச்செந்தூரில் இதுவரை 12 பேரும், வந்தவாசியில் 9 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த இடைத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை அதிமுகவை ஆதரிக்கின்றன. பாஜக தேர்தலைப் புறக்கணித்து விட்டது. எனவே இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X