பாமக ஓட்டுகளை பங்கு போட தி்முக, அதிமுக தீவிரம்
ஐந்து தொகுதி இடைத் தேர்தலை அதிமுக அன்று புறக்கணித்தது. இதையடுத்து அதிமுகவின் வாக்குகளை திமுகவும், தேமுதிகவும் செமத்தியாக சாப்பிட்டன. இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் தற்போது வந்தவாசியில் காட்சி மாறியுள்ளது. வன்னியர் பெல்ட்டில் வரும் வந்தவாசி தொகுதியில் தற்போது பாமக இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தனது கட்சியினர் 49 ஓ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த உத்தரவை நிச்சயம் பாமகவினர் நிறைவேற்றுவார்கள் என்பது நிச்சயமல்ல. காரணம், இது பண பலம் கோலோச்சும் காலம். எனவே பாமகவின் வாக்குகளை அள்ளி விட திமுகவும், அதிமுகவும் களம் இறங்கியுள்ளன.
குறிப்பாக திமுக முகாம்தான் இதில் படு வேகமாக களம் குதித்துள்ளதாக தெரிகிறது. பாமக நிர்வாகிகளை ரகசியமாகவும், பகிரங்கமாகவும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல அதிமுக தரப்பும் பாமக நிர்வாகிகளை வளைக்க ஆள் அம்பு பரிவாரங்களை ஏவியுள்ளதாம். இருப்பினும் திமுக ஆளுங்கட்சி என்பதால் ஆதாயங்கள் அதிகம் என்ற அடிப்படையில் அந்தப் பக்கமே பாமகவினர் கணிசமாக சாய்வார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிகவும் தனது பங்குக்கு அதிக வாக்குகளைக் கவர ஆர்வமாக உள்ளது. இருப்பினும் பண பலத்தைக் காட்டாமல் அமைதியான முறையில் வன்னியர்களின் வாக்குகளை அள்ள அதுவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறதாம்.