அமெரிக்காவில் 4 போலீஸார் சுட்டுக்கொலை
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள டகோமா விமானப் படைத் தளத்துக்கு அருகே அந் நாட்டு நேரப்படி நேற்று காலை 8.15 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒரு தேனீர் விடுதியில் அமர்ந்திருந்த 4 போலீசார் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.
அதில் 4 பேரும் அதே இடத்திலேயே பலியாயினர். இத்தனைக்கும் இந்த நால்வருமே புல்லட் புரூப் உடைகளுடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நால்வரும் லேக்வுக் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதல் நடத்திய நபர் போலீசாரை மட்டுமே சுட்டான். அந்த காபி ஷாப்பில் இருந்த வேறு யாரையும் சுடவில்லை.
தாக்குதல் நடத்திய நபர் கருப்பின வாலிபர் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மொரிஸ் கிளமன்ஸ் (37) என்பவரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிளமன்ஸ் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.
ஒரு குழந்தையை கற்பழித்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்துவிட்டு சமீபத்தில் தான் வெளியில் வந்தான். போலீசாரைக் கொன்றது இவனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தன்னை சுட்டவனை நோக்கி ஒரு போலீஸ்காரர் திருப்பிச் சுட்டுள்ளார். அதில் ஒரு குண்டு கொலையாளி மீது பாய்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிகிச்சைக்காக அவன் மருத்துவனைக்கு வரலாம் என்பதால் அப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் எச்சரிக்கப்பட்டுள்ளன.