இடைத் தேர்தல் - திமுகவுக்கு நாடார் பேரவை ஆதரவு
தூத்துக்குடி: தமிழக இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது,
கல்வி கடல் என அழைக்கப்படும் காமராஜரின் பிறந்த நாளை திமுக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. இதற்காக தமிழ்நாடு நாடார் பேரவை தமிழக அரசுக்கு கடன்பட்டுள்ளது.
கடந்த தேர்தலை போலவே இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூரில் 4 நாட்கள் நாடார் பேரவை நிர்வாகிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 10 லட்சம் பனை தொழிலாளர்கள், 50 லட்சம் தென்னை விவசாயிகள் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது இவர்களின் குடும்ப நலனும் பாதுகாக்க பட வேண்டும். இதற்காக அவர்கள் கள் இறக்க அனுமதியளிக்க வேண்டும். அரசு இதற்கு விரைவிலேயே அனுமதி அளிக்கும் என்று எண்ணுகிறோம் என்றார்.