இடைத்தேர்தல்: ஓட்டுக்கு ரூ. 5,000 தர திமுக திட்டம்- வைகோ
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
திமுக அரசு பழிவாங்கும் எண்ணத்தோடு என் மீது இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக நிறைய போராட்டங்கள் நடத்தி வருகிறேன். ஆதரவாகவும் பேசி வருகிறேன். இந்த வழக்கில் நானும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டோம். ஆனால் இப்போது என் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கோர்ட்டு மற்றும் ஜெயிலை பார்த்து பயந்து புலம்புவன் நான் அல்ல. அது உலகத்துக்கே நன்றாக தெரியும். இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாடுவேன். உரிய முறையில் வழக்கை சந்திப்பேன்.
கடந்த முறை இந்த வழக்குக்காக நான் நீதிமன்றத்தில் ஆஜரானபோது அளித்த பேட்டி குறித்து திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில், நான் 'சண்டித்தனம்' செய்வதாக எழுதியுள்ளார்.
அந்தப் பழக்கம் எனக்கு கிடையாது.ஈழத்தில் நடப்பது என்ன? என்று அன்று பேசிய பேச்சில் இப்போதும் நான் உறுதியாக இருக்கிறேன்.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் பணநாயகம் இல்லாமல் ஜனநாயகம் மட்டும் செயல்பட்டால் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.
திருமங்கலத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் எப்படி பணம் கொடுத்தார்களோ அதே போல நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் கொடுக்க திமுகவினர் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றார் வைகோ.