காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் விலக வேண்டும் என்கிறார் ஜெ. - தங்கபாலு
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது தொடர்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தன் மூலமாகவோ, தன்னுடைய அமைச்சகம் மூலமாகவோ இந்த அறிக்கை வெளியாகவில்லை என்று கூறியுள்ளார். இதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்க முடியாது.
இதனை சொல்கிற உரிமை அவருக்கு இல்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் ராஜினாமா செய்ய சொல்கிறார். சின்ன பிரச்சினைகளுக்கும் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும், ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி வருவது அவருக்கு வாடிக்கையாகி விட்டது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரச்சினை முடிந்துவிட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோம், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு இங்கு இடமில்லை.
தடை செய்யப்பட்ட இயக்கங்களை யார் ஆதரித்தாலும் அது வரவேற்கக் கூடியதல்ல. சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் சரியாக நடந்து வருகிறது.
சட்டத்திற்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
அப்போது நிருபர்கள், இளங்கோவன் தட்டிகளை அகற்றியதும் கூட சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட செயல்தானே என்று கேட்டபோது, அவர் சட்டத்தை எடுக்கவில்லை, தட்டியைத் தான் எடுத்தார் என்று படு 'புத்திசாலித்தனமாக' பதிலளித்தார் தங்கபாலு.