மத்திய சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலாளராகும் பரூக்கி
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இந்தத் துறையின் பங்கு மிக அதிகமாக உள்ள நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான பரூக்கி ஐஏஎஸ் இந்தத் துறையின் மூத்த அதிகாரியாக நியமி்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழக தொழில்துறை புதிய செயலாளராக, வணிக வரி மற்றும் பத்திர பதிவுத் துறையின் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் முதன்மை செயலாளரும், வணிகவரித்துறை ஆணையருமான டி.ஜேக்கப், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக இருக்கும் முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, வணிகவரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வசமுள்ள தொழில்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த பரூக்கி, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
பதவி உயர்வு அடிப்படையில் அவருக்கு இந்த டெல்லிப் பணி கிடைத்துள்ளது. அவர் தானாக விரும்பிச்
செல்லவில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய சூற்றுச்சூழல் துறையின் பங்கு முக்கியமானதாக உள்ள நிலையில் அந்தத் துறைக்கு முதல்வர் கருணாநிதி-துணை முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான பரூக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணை வவிகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கும், தமிழக அரசுக்கும் இடையே அண்மையில் மோதல் நடந்தது.
டெல்லியில் மலையாள அதிகாரிகளின் நாட்டாமை அதிகரித்துவிட்டதாக முதல்வரே குற்றம் சாட்டும் நிலை உருவானது.
இந் நிலையில், தமிழகத்தில் இருந்து பரூக்கியை இந்தத் துறைக்கு மத்திய அரசு நியமித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதன் பின்னணியில் திமுக-காங்கிரஸ் அரசியல் உறவும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையிலும், நிதித்துறையிலும் பணியாற்றியுள்ள பரூக்கி, சவுதி அரேபியாவில் துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.